
சாத்திரமறியா சூட்சும வெளியில்
ஒற்றைக் காலில் காத்திருக்கும் கொக்கு ,
இரையாகும் மீன்களுக்கும்
இரை தேடும் அலைச்சல்,
மௌனம் சிதைத்துப் பறக்கும்
சில் வண்டுகளைத்
தாவிப் பிடிக்கும் பறவைகளுக்கும்
பசியாற்றும் தேடல்கள்,
ஒன்றையெதிர்த்து ஒன்றின் பயணம்,
கனவுவெளிகளில் மனிதனின் தேடல்
சோம்பலுக்குள் முகம் போர்த்தும்
சூதுகளின் வெளிச்சம்,
காமம் சூடிய கயமைகளின் பதுக்கலில்
காதலின் பரவசங்கள்
எதிரெதிர் துருவங்களின் ஈர்ப்பில்லா
விசையழுத்தங்கள்,
வட்டப் பாதைகளில்
சுற்றித் திரியும் கோள்களுக்கும் கூட
வசப்படாத மௌனத்தின் ஓசைகள்,
ஜனனம், மரணத்திற்கு மட்டுமே
சாத்தியமாக்கி நகரும் சகலத்தின் ஒப்பனைகள்,
தூக்கத்தில் மரணித்து எழுந்து பாருங்கள்
புதிய பூமியில், புதிதான பயணங்கள் !
இலைகளைத் தொந்தரவு செய்யாதீர்கள்,
இசைத்துவிட்டுப் போகட்டும் புதிய இசை !
- மு.முகமதுபாட்சா*
05/12/2017
No comments:
Post a Comment