
அந்தக் கவிதையை
மடித்து வைத்து விட்டேன்,
படிமத்திற்குள் பதுங்கிக் கொண்டதாக
பெரும் குற்றச்சாட்டு,
படிமப் புறாக்களைப் பறக்க விடாமல்
அடைத்து வைத்ததாகவும் குற்றப் பதிவு,
வார்த்தைகளைக் கொன்று விட்டதாக
ஒருவன்
வழக்குத் தொடர்ந்திருக்கிறான்,
புரட்சி என்ற வார்த்தை
அரசாங்கத்திற்கு எதிரானதென்று
அமைச்சர் முழக்கமிடுகிறார்,
அதில் வரும் ஒரு வார்த்தை
தன் மதத்திற்கானதென
ஒருவன் தீயை கொளுத்திப் போட்டான்,
உளவுத்துறை
இப்போது ஒவ்வொரு எழுத்துக்களாக
பிரித்துக் கொண்டிருந்தது
தமிழே தப்பான வார்த்தை என்று
இந்தியில் எழுதி வைத்த குறிப்பை
படிக்கும் முன்பாக
பத்திரமாக அந்தக் கவிதையை
மடித்து வைத்து விட்டேன்.
- மு.முகமது பாட்சா*
11/01/2018 (17)
No comments:
Post a Comment