
அந்தக் கதை
அப்படிதான் முடிந்திருந்தது,
'அவனுக்காகவே
அவள் காத்துக் கொண்டிருந்தாள்...'
அத்தையொருத்தியையும்
அப்படிதான் பார்த்திருக்கிறேன்,
இறந்து போன கணவனின் படத்தோடுவே
வாழ்ந்து முடிந்தது அவளின் கதை
நண்பனின் அம்மாவை,
'மொட்டைப் பாப்பாத்தி' என்று
ஏளனமாக அழைத்த வாழ்க்கையும்
அதற்குள்தான் அடங்கியிருந்திருக்கும்
கணவன் இறந்த சோகத்தையும்
கழுவில் ஏற்றி விடுமாம்,
அவளின் அழகுகளைக் குலைக்கும்
அருவெறுப்புச் சடங்குகள்
தோழியொருத்தியின் வாக்குமூலமிது
மாமா ஒருவர்,
மனைவி போன மறு வருசமே,
புதிய மாமியின் மடியில் படுத்துக் கிடந்தார்
இப்போதெல்லாம் அப்படியில்லை,
'எவ்வளவோ பரவாயில்லை' என்று
அப்பத்தா சொல்லும் போது
அவள் முகத்தை
வார்த்தைகளால் எழுத முடியவில்லை,
அவள் வீட்டுக்காரரும்
அல்பாயுசுவில் போனவர்தான் !
- மு.முகமது பாட்சா*
மீள் - 06/01/2017
No comments:
Post a Comment