
புத்தகம் - 1
அதைக் கவிதையென்று
அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
அவர்களின் கால்களில்
சக்கரம் கட்டப் பட்டிருந்தது.
கவிஞரின் கழுத்தில்
சினிமா வெளிச்சம் தொங்கியது,
பதிப்பகத்தின் கண்ணாடி வழியே
பார்த்தக் குருடர்கள்
அதனை ஆகா! ஓகோ! என்றார்கள்,
ஷெல்லியும் கீட்ஸூம் கூட
அவற்றிற்கு இரையாகிப் போனார்கள்,
அறிவு சீவிகளின் மோதிர கைகள்
கவிதைகளை ஆசிர்வதித்தன,
இல்லாத வரிகளுக்கும்
இலக்கணம் தேடி வாசிக்கப் பட்டது.
ஓவியம்
ஒரு நிர்வாணத்தை வரையறுக்க
வழவழ அட்டைப் படத்திற்காகவே
சிலர் வாங்கியும் சென்றார்கள்....
எல்லோரும் பலமாகக் கை தட்ட
கவிதைகள் விற்கத் தொடங்கின....
அங்குதான் கிழிந்த ஆடைகளுடன்
உண்மையான ஒரு கவிதையும்
பலகீனமாகக் கை கட்டி நின்றிருந்தது.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment