
தொடரியின் யன்னல் வழியே
வழியும் முந்தானை
வாசனையை உதிர்த்துவிட்டுப் போகிறது
கூழாங்கல்லின் படிமமாய்
அவள் முகம் சட்டென மறைகிறது,
அரை நிர்வாணச் சிறுவர்களின்
கையசைப்பில்
அவளின் புன்னகை இடம் மாறியிருக்கலாம்
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தவன்
வார்த்தைகளுக்குள்
என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்...
சலனம் மாயபிம்பத்தின் மறு வடிவம்,
தொட்டுச் சிலிர்த்த குளிர் கரத்தால்
திரும்பிப் பார்க்கிறேன்
பட்டையழுக்குடன் அழகாயிருந்தவள்
பசிக்குது என்றாள்
வார்த்தைகளை உதிர்த்துவிட்டு
மீண்டும் புடைக்கிறேன்
எழுத்துகள்
இப்போது கண்ணீரோடு சேர்ந்து
சோறாக வெந்து கொண்டிருக்கிறது...
- மு.முகமது பாட்சா*
03/01/2018 (5)
No comments:
Post a Comment