
வானம் பிளந்து பெரும் வெயில்
பெய்து கொண்டிருக்கிறது
கூரையிடுக்கின் வழியே
சொட்டுச் சொட்டாய்
சொட்டிக் கொண்டு இருக்கிறது
துளிகளில் வெயில்
பாத்திரங்களில் சேமித்த வெயில்
நிரம்பி வழிகிறது
வெயிலை நனைத்த குருவிகள்
சிறகுலர்த்திக் கொண்டிருக்கின்றன
வெதுவெதுப்பான
வெயில் கோலமொன்றை வரைந்து
அதில் மார்கழிப் பூவொன்றை
நட்டு வைத்து விட்டுப் போகிறாள்
எதிர் வீட்டுப்பெண்
ஒரு தண்ணீர் லாரி
குடங்களில் வெயிலை
நிரப்பி விட்டுப் போகிறது
எல்லோரும் கைகளில் ஏந்திப்
பருகிய படியே
அமைதியாய் நடந்து போகிறார்கள்
அந்த சலவைத் தொழிலாளி
வெயிலைப் பிழிந்து
உலர்த்திக் கொண்டிருக்கிறான்
அந்த தர்ப்பூசணி விற்பவன்
செந்நிறக் கீற்றொன்றை
என் கைகளில்
பரிசளித்துவிட்டுச் சிரிக்கிறான்
விதைகளைத் துப்பி விட்டு
சூரியனைச் சுவைத்த படியே
நகர்கிறேன் நான் !
- முருக தீட்சண்யா
No comments:
Post a Comment