
கனவுதலை
தலையில் தூக்கி வைத்துவிட்டால்
சுமந்து கொண்டே திரிகின்றோம்,
பலன்களைப்
பல்லாக்கில் போகிறவன்
அறுத்துக் கொண்டு போகிறான்,
நிஜ உலகில் கண் விழித்துப் பார்,
நெருஞ்சி முட்களின் மீதுதான்
படுத்துறங்குகின்றோம் ,
வாசல்களில் கோலம் போட்டு
வளைவுகளாய் கட்டி
கையசைக்கிறாயே , அது யாருக்காக?
சாக்கடை புழுக்களுக்காக
சண்டையிட்டுக் கொள்வதும்
நமக்கு மட்டுமே தெரிந்தக் கலை,
வேலைக்காரனென்று வந்தவர்கள்தான்
இடுப்பில் சங்கிலியை கட்டி
நம்மை வைத்தே
வேடிக்கைக் காட்டுகிறார்கள்,
பஞ்சணையில் அவர்களை
படுக்க வைத்து விட்டு
பாழுந்தரையில் படுப்பதே
நமக்கும் பழக்கமாகி விட்டது ,
புற்றுக்குப் பாலூற்றிதான்
பாம்புகளை வளர்த்துவிடுகின்றோம்,
கொத்துமென்று தெரிந்தும்
கும்பிட்டுத்தான் நிற்கின்றோம்,
கெட்ட ஆவிகளை விரட்ட
துஷ்ட ஆவிகளை வரவழைத்து
துஷ்ட ஆவிகளை விரட்ட
சூது தெரியாமல் விழிக்கின்றோம்
போராட்டங்களென்பது
போர்வைகளுக்குள்தான் உறங்குகின்றது,
எழுப்ப மனமில்லாமல், நாமும்
சேர்ந்தேதான் தூங்குகின்றோம்.
- மு.முகமதுபாட்சா*
மீள் - (03/01/2017)
No comments:
Post a Comment