
முதுகெலும்பை
உடைத்து வைத்து,
மூலையில்
உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள்
இழவு வீடுகளில்
தோரணம் கட்டி வாழுகின்றது,
பன்னாட்டு நிறுவனங்கள்
பருத்தியைப் போட்டவன்
பாழாய்ப் போனான்,
கரும்பை விதைத்தவன்
கண்ணீரில் வாழ்கிறான்,
தண்ணீரைத் தேடி
புதைந்துபோன விவசாயிகளின்
கண்ணீரைத் தொட்டு
கரண்சி எண்ணுகிறான்
அரசியல் அரக்கன்
செயற்கை மரங்களுக்கு
வண்ணங்களைத் தீட்டிவிட்டு
இயற்கையின் வேர்களை
வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்
காற்றைத் திருடும்
கபோதிகளுக்கென்ன தெரியும்?
நாளைப் பிச்சையெடுப்பதில்
அவன் பிள்ளைகளும் அடக்கம்
சொகுசுக் கத்தியால்
சுரண்டிக் கொள்ளும் சாணக்கியர்களே,
மாதவிடாய் துணிகளில்தான்
நீங்கள், உங்கள் முகங்களைத்
துடைத்துக் கொள்கிறீர்கள்
பசப்பு வார்த்தைகளால்
இனியும், பாசனம் செய்யாதீர்கள்,
கசப்புகளெல்லாம் ஒன்று திரண்டால்
காணாமல் போவது நீங்கள்தான் !
- மு.முகமதுபாட்சா*
மீள் (03/01/2017)
No comments:
Post a Comment