
அடித்தளமில்லாத
ஸ்தூபியின் மீது உட்கார்ந்திருக்கும் பறவைக்கு
பயமென்பது ஒன்றுமில்லை,
பேருந்தின் ஓட்டத்தையும் மிஞ்சிப் பயணிக்கிறது
பயணிகளின் எண்ணம்,
உடைந்த சிலைக்கு உள்ளுணர்வுகளில்லை
அழுது கொண்டிருக்கிறான் ஸ்தபதி,
கிழித்துப் போட்ட ஓவியங்கள்
அதே கோடுகளால் வரையப் படுவதில்லை,
காதுகளையும் கண்களையும்
இரசனை ஆக்கிரமித்துக் கொள்ள...
நாக்கினை சுவைக்கிறது ருசி,
இதயம் என்பது
எப்போதுமே ஒரு மாமிசப் பொருள்,
சிந்தனையென்பது
மூளையில் முகம் பார்க்கும் கண்ணாடி,
காதல் உணர்வுகளின் சங்கமம்
நேசமும் வேசமும் அதன் இரண்டு பக்கங்கள்,
சுண்டிப் போட்ட நாணயத்தில் விழுவது
காட்சிப் பிழை,
வெற்றிகளென்பது
மண்டைக்குள் தொங்கும் தோரணம்,
மமதை மண்ணுக்குள் புதைவது,
நான் - நீ - களிமண்
சுடாத பாத்திரம்
சுற்றும் வரை பம்பரம்.
- மு.முகமது பாட்சா*
17/02/2018
No comments:
Post a Comment