
மௌனம்
மௌனமாக இருக்கவேண்டிய
அவசியமில்லை,
போதிமரத்தின் சலசலப்பில்தான்
புத்தன் மௌனத்தை தியானிக்கிறான்,
தியானத்தின் உச்சமாய்
பீறிட்டழும் மழலையின் வரவில்
மகிழ்வடைகின்றன இல்லத்தின் சுவர்கள்,
மரணத்தின் உச்சம்தான்
மௌனமென வாதிக்கிறான் வெட்டியான்,
வாய்பேசா புழுக்கமென்று
மூச்சுக் காற்றோடு பேசிக் கொண்டே
மௌனம் எப்படி மௌனித்திருக்க முடியும்?
அகராதிகளை
வேண்டுமென்றால் திருத்திவிடலாம்,
மனம் பேசிக் கொண்டேயிருப்பதையும்,
விழிகள் பேசிக் கொண்டிருப்பதையும்
மௌனம் சுவாசித்துக் கொண்டிருப்பதாக
எப்படிப் பொய் சொல்லமுடியும் ?
மரணித்துவிட்ட மௌனத்தை
போலி மௌனத்தால் மறைக்கப் பார்க்கிறோம்...
மௌனத்தின் பிரதியாய் விழுந்த சருகுகளிடம்
போதி மரத்துக் காற்று
பேசிக் கொண்டேதான் இருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
22/02/2017
No comments:
Post a Comment