
பிரபஞ்சம் மெல்ல நெளிகிறது
நீர்த்த நினைவுகள்
மேகப்பொதியில் உலர்கின்றன
உலர்ந்த உதடுகளின்
ஈரமில்லா ரேகைகளின் வழியே
ஒரு காலத்தின் மௌனம் அசைகிறது...
கண்களின் வழி அடைபட்டிருக்க
இதயத்தின் வழி நுழையும்
அந்த ஒற்றை ரோசாவின் இதழ்களில்
ஒரு யுகத்தின் காதல் பயணிக்கிறது....
வளையல் துண்டுகள்
வானவில் ஜாலம் காட்டுகின்றன...
பிரபஞ்ச மௌனத்தின் பெருமூச்சு
காதலின் படிமமாய்
அலைகளைப் பிடித்து கரையினில் வீச
மெல்லப் பறக்கும் ஆன்மா
அவளின் கைகளை விட்டுவிடவில்லை,
காதலர்களுக்குச் சிறகுகள்
எப்படியும் முளைத்து விடுகின்றன....
கதறியழும் இவ்வாத்மாக்களுக்கு
எப்படி தெரியப் போகிறது
சொல்ல மறந்த அந்தக் காதல்!
- மு.முகமது பாட்சா*
13/02/2018
No comments:
Post a Comment