
என்னை தேடிக் கொண்டிருந்தவிடத்தில்
சில கற்களையும் முட்களையும் எடுக்கிறேன்,
நானென்ற பிரமை நிழலாகவே விரிகிறது,
சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த மௌனத்தை
எரியும் விறகுகள்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன,
புறாக்களின் தேவபாஷை
காதலென்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்.
மதங்கள் அறுவாளை தீட்டிக் கொண்டிருந்தன...
தார்சாலைக்கு நகர்ந்த புழு
வெண்ணெய்யாக உருகுகிறது..
பழியை வெயில் சுமந்து செல்கிறது
நகரம் என்பது ஓரெழுத்தின் இடம் மாற்றம்,
வேர்களின் தவம் நீர்த் தேடும் பயணம்,
இயற்கையின் முலைகளில் நெருப்பின் சீற்றம்,
அலைகள் வருடிக் கொடுப்பது வாரியிழுப்பதற்குதான்,
மின்னல் எச்சரிக்கை,
ஆசைகள் மூச்சுக்காற்றை உண்ணுகின்றன,
எலும்புகளின் மிச்சங்கள்
நான்- எனது கிரீடம் சூட்டிக் கொள்கின்றன!
- மு.முகமது பாட்சா*
19/02/2018
No comments:
Post a Comment