
நெருட்டின் ஆழ்மன அசுரம்
பஞ்சு போர்த்தி மேகமென மெல்ல நகரும்
தருவையின் தழல் வெப்ப மூச்சு
பயிர்களின் கருவத்தை கருக்கியெரிக்கும்
நீள்விசும்பின் நிழல்தேடி
யாகத்தின் ஆசைத் தீ பயணிக்கும்...
கடோரன் கைகளில் அருள் முத்திரை ஜொலிக்க
சாஸ்வதம் சன்னியாசம் வாங்கும்,
போதியின் வேர்களில் புற்றீசல் கிளம்ப
புத்தவிகாரத்தில் இரத்தம் தெளிக்கும்,
மயானத்தின் எலும்புகளே ஆபரணங்களாக
நாகரீகம் நாலுகுணம் மறந்து போகும்,
கடையறியா காமத்தின் கழற்சி
கட்டற்ற கரைபுரண்டு கண்ணவிழ்ந்தோடும்
நீதியின் மார்பினில்
நெஞ்சுரக்க ஈட்டிகள் பாயும்...
கடாட்சன் என்பவன்
காருண்யம் என்ன விலையெனக் கேட்பான்,
யுகத்தின் கோபத்தீ வேர்களை பற்றியெரிக்க
உள்வாங்கும் உயிர்களின் சப்த அபயத்தில்
இனத்தின் மிச்சமாய் நிற்கலாம்
மீசையை முறுக்கிக் கொண்டு ஒரு கவிதை.
- மு.முகமது பாட்சா*
22/02/2018
No comments:
Post a Comment