ராபியத்துல் பாஸ்ரியா - ரமலான் 10

'ராபியாவிற்குப் பைத்தியமா என்ன?
ஒரு கையில் நெருப்பும்
ஒரு கையில்
நீருமல்லவா எடுத்துச் செல்கிறாள்...'
'ஞானக்கிறுக்கு முற்றிவிட்டது'
பாஸ்ரா நகரத்து வீதிகளைப்
பற்றிக் கொண்டாள் சூபி ஞானி
ராபியத்துல் பாஸ்ரியா!
எதற்காக இந்தக் கோபம்?
நெருப்பைக் கொண்டு சுவனத்தை எரிப்பேன்
நீரைக் கொண்டு
நரகத்தை அணைப்பேன்...
அடியார்களின் அன்பும் அச்சமும்
அதன் பக்கம்தான் விழுந்துவிட்டது
இறையன்பு இல்லவேயில்லை...
அல்லாஹ்வின் காதல்
அளவற்று இருந்ததால்
அடியாளின் காதலும் - அவன்
காலடிகளில் விழுந்து கிடந்தது...
ராபியத்துள் பாஸ்ரியா பாடுகிறார்
நரகத்திற்குப் பயந்து
உன்னைக் காதலித்தால்
என்னை எரித்துவிடு!
சுவனத்தின்
ஆசைக்காக நேசித்தால்
வெளியாக்கிவிடு...
இரண்டுக்கும் இல்லையென்றால்
தூயோனே... என் தும்பையே
என் துயரை
நீயே துடைத்துவிடு!
-மு.முகமது பாட்சா*
16/05/2019
No comments:
Post a Comment