
அணிலாகத்தான்
அஃது என்னருகில் வந்தது
அதனைத் தடவிக் கொடுத்தேன்
அதன் பற்கள்
என்னைப் பிறாண்டிப் பார்த்தன
இப்போது அஃதொரு கடுவனாக இருந்தது
அதன் கால் நகங்கள்
சில ஆயுதங்களை
ஒளித்து வைத்திருந்தன...
அஃதொரு புலியாக மாறும் முன்
வீசிவிடத் துணிந்தேன்
ஆனால் அஃது இப்போது
நாயாக நின்று கொண்டிருந்தது...
நன்றியுள்ளதென்று
போவோரெல்லாம் புகழ்ந்தார்கள்
அதன் எச்சில்
இப்போது உதிரத்தைச் சுழற்றியது...
வேறு வழியில்லை...
இப்போது நானும்
ஒரு நரியாகவாவது மாறவேண்டும்...
இல்லையென்றால் அஃதடுத்து
ஒரு பாம்பாக மாறக்கூடும்.
- மு.முகமது பாட்சா*
15/05/2019
No comments:
Post a Comment