
எனது பிரமைக்கு
எட்டு இறக்கைகள் இருக்கின்றன
அவை ஒவ்வொன்றும்
ஒவ்வொரு திசையை நோக்கியே
பயணிக்க எத்தனிக்கிறது..
என் பிரமை
ஓர் அவாந்தரத்துப் பறவை...
அதற்குக் கால்களும் கிடையாது...
கண்களும் தெரியாது...
அண்டவெளியெங்கும் துர்நாற்றப் போசனம்..
ஆகாரமில்லாத
தனிமையின் வெப்பக்கூட்டில்
பொய்த்திருக்கிறது
அதன் மெய்மையின் முறுவல்...
பிரமை ஓர் அச்சம்
ஒளி வட்டம் காண்பது காட்சிப்பிழை...
எண்திசையிலும்
ஒருமித்துப் பறக்கும் வேளையில்
என்னுடல் விழுந்து மிதக்கும்
பிரமையற்ற சாகரத்து மீனாக
நீந்தும் பெரும் ஆசையுடன்.
- மு.முகமது பாட்சா*
19/05/2019
No comments:
Post a Comment