
வார்த்தைகளே இல்லாத மௌனத்தை
விரித்து வைத்திருக்கிறோம்...
நினைவுக் குதிரைகள் நம்மை தள்ளிவிட்டு
நெடுந்தூரத்திற்கு ஓடுகின்றன
தாகம் தவிப்பவனின் கவிதையில்
நதி வரண்டேயிருக்கிறது...
கால்தடங்களை அச்சிட்ட மண்ணிற்கு
காதலின் அழுத்தம் தெரிந்திருக்கலாம்...
கள்ளிச்செடிகளின் பாலையில்
கனவாய் மீன்களாக அலைகின்றன கண்கள்...
ஒரு குக்கூ சப்தமும் இல்லாத வெளி
அழுத்தமான அடர் முத்தம்
ஒட்டகத்தை சிலிர்த்து ஓடச் செய்கிறது
கடல் நீர் நதிக்குள் பிரவேசிக்க
நகரம் மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறது...
பூமியின் தாகம்
உப்புத் தண்ணீரை இனம் பிரிப்பதில்லை...
ஆசுவாசமென்பது
ஒரு பிரளயத்தின் பின்னணி ஓவியம்
இப்போதாவது சொல்
உன் வார்த்தையில் உட்கார்ந்திருக்கும் வெட்கம்
என்னமொழி?
- மு.முகமது பாட்சா*
11/05/2019
No comments:
Post a Comment