
குதிரையின் குளம்படிகளின் சப்தம்
ஓடிக்கொண்டேயிருக்க
கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன்...
சன்னல் வழியாக ஒரு மின்னல்
எட்டிப் பார்த்துவிட்டு நகர்கிறது...
மழை வராது என்பது நிச்சயம் ...
தொடர் நாயகியின் அழுகையை
ஒளிக்கூறுகளுக்குள்
அழுத்திப் பிடித்து அழுகிறார்கள்...
தொல்லைப் பேச கடன்காரன்
அழைத்துக் கொண்டேயிருக்கிறான்
தொடர்பு அறுந்து போகிறது...
இறந்து போனவன் பாக்கியசாலி
இறுதி ஊர்வலம் போகிறது...
ஆடை நீக்கி அருந்தினால்தான்
தேநீர் நெருடாது
ஆனாலும் ஆறிப் போய்விட்டது...
வெளியே நாய்கள் சப்தம்
சண்டை இப்போது ஓயாது...
எழுதிய தாள் கசங்கிக் கிடக்கிறது
இது கவிதையில்லையென்று
உங்களுக்கும் இப்போது தெரியும்தானே!
-மு.முகமது பாட்சா*
25/05/2019
No comments:
Post a Comment