
ஒரு சொல்லுக்குள் சொல்வைத்துப்
பேசுவதே வழக்கமாகிவிட்டது
எந்தச் சொல்லைப் பிரித்து
எந்தச் சொல்லில் தேடுவேன்...
நீ விழிகளில் பேசும் யவன மொழி
அழகென்று வியக்கும் போது
உன் முகம் மொழியும் வார்த்தைகள்
என்னைச் சிறை செய்கின்றன...
விரல்களின் மொழி பின்னலென்றால்
உன் உதடுகளின் மொழி மௌனம்...
நான் வழக்குமொழி மறந்துவிட்டு
வாழும் மொழிக்குத் தாவுகிறேன்...
உனக்கும் எனக்குமான இடைவெளியில்
பிரமை மொழி உட்கார்ந்திருக்கிறது...
நீ சுட்டும் ஒரு மொழிக்காகத்தான்
அருகில் வைத்திருக்கிறேன்
கட்டிக் கொண்டு வந்த பெரும் இரவை...
வெட்டியாக நகர்கிறது தனிமை
அதுவும் கூடச் சற்று அழகாகத்தான்.
- மு.முகமது பாட்சா*
14/05/2019
No comments:
Post a Comment