Monday, 13 May 2019

உமரென்ற வாள் - ரமலான் 7

உமரென்ற வாள் - ரமலான் 7
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
வாளென்பது மிகவும் கூர்மையானது 
அதன் மதி நுட்பம் 
வாள் பிடித்தவன் மூளையில் அமர்ந்திருக்கிறது 
வாளென்பது வெறும் கருவிதான் 
உமர் பின் கத்தாப் ரலி அவர்களிடமும் 
ஒரு வாள் இருந்தது... 
அது மிகவும் ரத்தத்தை ருசி பார்த்தது 
கோபத்தை உரசி அடிக்கடித் தீட்டிக் கொண்டது.. 
அண்ணல் நபி ஸல் தோலை உரசிப்பார்க்க 
நாக்கை அவ்வப்போது சுழற்றியது... 
அன்றும் அந்த வாள் அப்படித்தான் துடித்தது... 
நுஜமென்பவர் 
அந்த வாளைத்தடுத்து ஏளனமாகச் சிரித்தார்... 
உமரின் கோபம் 
நுஜமின் கழுத்தருகே உட்கார்ந்து கொள்ள... 
நுஜம் மீண்டும் சிரித்தார்... 
முகம்மதுவை கொல்லும் முன்பாக 
மைத்துனன் ஸயீத்தை என்ன செய்வாய்? 
உன் தங்கை ஃபாத்திமா 
இஸ்லாத்தில் இணைந்துவிட்டாள் தெரிந்தாயா? 
வாள் இப்போது 
தணலில் தகித்துப் பிழம்பானது... 
மைத்துனன் வீட்டிலிருந்து மறையின் வாசம்! 
கதவைக் காலால் உதைத்து 
ஸயீத்தின் கழுத்தைக் கொலைவெறி நெறிக்க 
தங்கை ஃபாத்திமா தடுத்தாள்... 
'முதலில் உன் மூளையில் கோபத்தைக் கழற்று 
இறைவசனம் தருகிறேன் ஓதிப்பார் 
அஃதொரு இயலாதவன் புலம்பலென்றால் 
அப்போதே சொருகு உன் கொலை வாளை' 
ஒட்டிப்பிறந்த உதிரத்தின் கண்ணீர் 
மெல்லத் தொட்டியை நனைத்து ஈரமாக்கியது... 
இப்போது உமரின் கையில் 
மறையின் வசனம் 'தாஹா' தண்ணீராய் பொழியக் 
குளிர்ந்த வாள் 
அண்ணலைத்தேடி அவசரமாகப் போனது 
தான் தான் இஸ்லாத்தின் 
இரண்டாம் கலீஃபா என்று கூடத் தெரியாமல். 

- மு.முகமது பாட்சா*
13/05/2019


No comments:

Post a Comment

Popular Posts