
நீயும் நானும்
நீண்ட நேரமாக உட்கார்ந்திருக்கிறோம்
நமக்குள் ஓர் இடைவெளி
புரிதலோடுவே அமர்ந்திருக்கிறது...
நான் உன்னைப் பற்றி விவாதிக்கவும்
நீ என்னைப் பற்றிப் பேசவும்
சில குறிப்புகளை எடுத்து வந்திருக்கிறோம்...
நம்மைப் பற்றிப் பேச விரும்பாத தேநீர்
ஆடைப் போர்த்தி உறங்குகிறது...
நமக்குள்ளிருக்கும் வார்த்தைகளை
நாமே பிழிவதால்
அவை புழுங்கி அழுகல் நாற்றமெடுக்கின்றன
அடர்த்தி என்பது
மௌனத்திற்கும் பொருந்தும்தானே?
இப்போது நம்மருகில்
எந்த ரோஜாத் தோட்டமும் இல்லை...
சன்னல் திறந்துதான் இருக்கிறது
நீயும் நானும் எப்போதோ வெளியேறிவிட்டோம்
நீ நேரம் கடந்துவிட்டதாகச் சொல்கிறாய்
நான்
நேரம் இருந்தால் சந்திப்போம் என்கிறேன்..
அந்தத் தேநீர் எதற்காகவோ
ஆறிப்போய் அங்கேயே கிடக்கிறது...
- மு.முகமது பாட்சா*
22/05/2019
No comments:
Post a Comment