
நீள்வட்டப் பாதையில் சுழலும் வரிகளோடு
ஒரு கவிதை வலம் வருகிறது...
சிந்தனைவெளி ஓர் அகன்ற ஞானம்
பறவைகளின் மொழியில்
பேசிக் கொள்ளும் தளிர்த்தாவரங்கள்...
பூமிக்குள் அரூப மந்திரங்களாய் எழுத்துக்கள்
கபம் கோர்த்து இருமுகிறது வஞ்சகச் சொற்கள்
நான் கவிதையா? கட்டுரையா?
எனப் புரியாமல் வேதாந்த மொழிகள்...
அகடூரியின் அகன்ற வாயிற்குள் நுழையத்
தவளைகளின் பிரார்த்தனை...
சொற்களின் ஆயுதங்களாய் கலகம் ...
ஊடே மெல்லிய நீரூற்றாய்க் கவரும் சிந்தனை
சித்திரம் வரைந்தவன் கவிதையென்கிறான்
சிகப்பு எழுத்துகளின் இரவு கவிதைகள்
கசங்கிய வியர்வையில் பிழையான வரிகள்...
ஒரு மரணத்தின் பின்னால்
சிதறிக் கிடக்கும் அபூர்வச் சொற்கள்..
என் மேல் ஊர்ந்து செல்லும் வார்த்தைகளில்
நான் மட்டும் கவிதையாக
நீள்வட்டப் பாதையில் சுழலும் வரிகளோடு..
- மு. முகமது பாட்சா*
18/05/2019
No comments:
Post a Comment