Thursday, 23 May 2019

கடவுளின் முத்தங்கள் - ரமலான் 16

கடவுளின் முத்தங்கள் - ரமலான் 16
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உட்புறம்
கடவுளின் முத்தங்களைப்
பூட்டி வைத்திருக்கிறோம்... 
அதிலிருந்து பூக்கள் மணப்பதாக 
ஓர் இதிகாசம் 
எழுதி வைக்கப்பட்டிருக்கிறது... 
நூரென்ற வெளிச்சம் 
அதனுள் இருக்கும் வரை 
இந்த யுகம் பிரகாசிக்கும் ... 
அதானின் அழைப்புகளுக்கிடையில் 
சுவர்க்கமும் நரகமும் ஊசலாடுகின்றன... 
தாடியைக் கோதிவிட்ட நீர் 
சஜ்தாவில் விழுந்து 
பாவமன்னிப்புக் கேட்கிறது ஆனாலும் 
அவர் இன்னமும் தக்பீர் கட்டவில்லை... 
ஓடிவந்த குழந்தையொருவன் 
இமாமின் பின்னால் நின்று 
விழுந்து எழுந்திருக்கிறான்... 
அவனது ஆமீன் சப்தம் 
பள்ளிவாசலையே நிறைக்கிறது.. 
கடவுளின் முத்தம் 
அவனிடம் கை மாறுகிறது... 
விரல்களை ஆட்டுவதும் 
ஆட்டாததும் உங்கள் விருப்பம்... 
ஆனாலும் 
இருப்பிலிருந்து எழுந்தோடும் 
நினைப்புகள் அல்லவா 
நேரத்தைக் கணக்கிடுகின்றன... 
கைகளை விரித்து வைப்பதால் 
முத்தங்கள் மொத்தத்தையும் 
அள்ளிவிட முடியுமா? 
வெளியே உன்னிடம் 
கையேந்தியவர்களுக்கு நீ 
ஒரு புன்னகையைக் கூடப் போடாதபோது 
கடவுளின் முத்தங்கள் 
மலிவாகக் கிடைக்குமா என்ன?

- மு.முகமது பாட்சா*
23/05/2019

No comments:

Post a Comment

Popular Posts