
அந்தத் தூவல் தனியாகக் கிடந்தது
அதன் ஏக்கங்களை
யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை...
அதன் கனவுக்கூடு மசியின்றிக் கிடந்தாலும்
அஃது எதையோ
இன்னமும் எழுதத் துடிக்கிறது...
அஃதொரு எழுத்தாளனின் தூவலாக இருக்கலாம்
அல்லது கணக்குப் போட்டுச் சளித்தவன்
தூர எறிந்ததாகவும் இருக்கும்...
எனக்குள்ளிருக்கும்
கனவுகளை அதனுள் நிறைக்கிறேன்...
அஃது இப்போது அழுகிறது
மை வழிந்த தாள் அரூபச் சித்திரமாகிறது...
அதனுள்ளிருந்து சில சப்தங்கள்
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன...
ஒப்பாரிப் பாடகனொருவன்
அஃதில் ஓரமாக உட்கார்ந்திருக்கிறான்...
ஒரு காகம் மட்டும் தனியாக நிற்கிறது...
அழிந்து போன பிரபஞ்சம்
அதனில் மிதக்கும் நோவாவின் கப்பல்...
அந்தத் தூவலைத் தூர எறிகிறேன்
அதனுள்ளிருந்த சப்தங்கள்
என் கூடவே இன்னமும் பயணிக்கிறது.
- மு.முகமது பாட்சா*
26/05/2019
No comments:
Post a Comment