
ஒரு காற்றுக்காக ஏங்குகிறது
அந்தக் காய்ந்த இலை...
பச்சையம் இழந்துவிட்டாலும்
அதன் பசுமை
மரத்தோடுதான் ஒட்டிக் கொண்டிருக்கிறது...
காம்பின் வலி
மெல்லக் கழலும் போது
சுவாசத்தின் சுதந்திரம்
இறகுகளைப் பொருத்திக் கொள்ளும்...
வேர்களுக்கும் நன்றியிருக்கும்
மழைகளை வருவித்துக் கொடுத்ததில்...
நிழலின் ஒரு துளி உதிரும்போது
மரணம் என்கிறீர்கள்...
மண் அதனை
தன் சுவாசமென்று மொழிகிறது...
மெல்ல நழுவும் அந்த ஒற்றைச் சருகில்
சில பறவைகளின் பெயர்களும்
எழுதப்பட்டிருக்கும்.
- மு.முகமது பாட்சா*
22/05/2019
No comments:
Post a Comment