
ஒரு தீவின் கதை.
♪
நீங்கள் மழை பெய்தால்
தவளைகளும்
விஷ ஜந்துக்களும் கத்தும்
என்பதை அறிந்து வைத்திருக்கின்றீர்கள்
தொன்மம் தொட்டு விஷேடமாய்
இப்படிதான் வாழ்வியம்
ஒவ்வொரு பரம்பரையினருக்கும் கையளிக்கப்படுகிறது.
நேற்று புதிய சொல் இதழின்
உரையாலொன்றுக்காய்
வாழைச்சேனையை கடந்து செல்லும்
கல்முனை பேரூந்தில்
ஒரு மூதாட்டியுடன்
உரையாடக் கிடைத்தது.
அவளது மூதாதையர்கள்
பல நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும்
அவளது பரம்பரையினர்
நீரிலும் நிலத்திலும் வாழ்ந்திருப்பதாகவும்
சொன்னாள்
நீரிலும் நிலத்திலும்
வாழ்வதிலென்ன புதினமென்று
நீங்கள் கேட்கலாம்.
அது பூமி வரைபடத்தில்
காடுகளையும்
மலைகளையும்
சமூத்திரங்களையும்
கடல்களையும்
நதிகளையும்
வயல்வெளிகளையும் கொண்ட தீவு.
அங்கு பாலைவனமிருந்திருக்க
வாய்ப்பில்லை
ஆனால்,
தேசம் முக்கி
பாலைவனத்தை நோக்கி
தொழில் அடிமைகளாய்
சென்று கொண்டிருக்கிறார்கள்
மூதாட்டின்
தந்தை வழி உறவு
பாம்பாக இருந்திருக்கிறார்கள்
தாய் வழி உறவு
தவளையாக இருந்திருக்கிறார்கள்
ஒன்றுக்கு பல தடவை
பாம்புகள் தவளைகளை
அடித்துச் தின்றுருக்கின்றன
தவளைகளின் தவளை
போரொன்றில் கொள்ளப்பட்டதாக
வரலாறுகள் முன்னுக்குப் பின்
கதை கதையாய் உறுதிபபடுத்த முடியாத
விபரங்களை முன் மொழிகின்றது.
அவைகள் சோடித்தவைகள்
என்பதால் போலிகளை
இங்கையே விட்டு விடுவோம்.
ஒரு நாள்
பாம்பின் தேநீர் கோப்பைக்குள்
தவளை தவறி விழுந்துவிட
பாம்பிற்கும் தவளைக்கும்
அதுதான்
அந்தக் காதல்தான்....மலர்ந்துவிடுகிறது
அவர்கள்
உணவிற்காக பலகாலமாய்
தங்களது
பூர்வீக குடிகளை தின்றமையினால்
பூர்வீக குடிகள்
தீர்ந்திருந்தன,
போருக்குப் பின் சில குழந்தைகளே எஞ்சியிருந்தன
எனவேதான்
சில நாட்களாய்
பாம்பிற்கும் தவளைக்கும்
பூர்வீக குடிகள்
தொண்டைக்குள் சிக்கிக்கொள்கின்றமையினால்
மிக நெருங்கிய
பால்ய உறவையுடைய
எலிகளை வேட்டையாடித் தின்ன
பாம்புகள் தொடங்குகின்றன
தவளை என்கிற சொல்லை
எந்த வாக்கியத்தில் செருகினால்
கவிதை முழுமையடையும்
என்பதை நீங்கள் முடித்து வையுங்கள்.
_ ஏ.நஸ்புள்ளாஹ்.
No comments:
Post a Comment