
காட்சி ; 1
அவன் நடந்த பாதையில்
ஓநாயின் நிழலொன்று விரிகிறது,
நரிகளின் காதுகள்
நாற்புறமும் இறைந்து கிடக்கின்றன,
ஒரு வேட்டைக்கான முகாந்திரம்
இருக்கைப் போட்டு அமர்ந்திருக்கிறது,
புறாக்கள் கூடடைந்து கிடக்கின்றன,
கள்ளிப் பூக்களின் வாசனையில்
பூத்திருக்கும் மௌனம்
த்யானமல்ல!
காட்சி : 2
அவன் தன்னை
இரட்சகனாக அறிவித்துக் கொண்டான்,
அவன் உயர்த்திய கைகளில்
கருணை பூப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள்,
அவனின் இதழ் வடித்த புன்னகையை
புத்தன் இழந்திருந்தான்,
அவன் காலடியில் விழுந்து கிடந்தவர்கள்
அவனைக் கடவுளென்றார்கள்!
காட்சி : 3
பிணங்களின் மேல் நின்று
அவன் பேசிக் கொண்டிருந்தான்,
"கொல்வது பாவம்"
புறாக்கள்
கூடுகளைச் சமாதிகளாக்கிக் கொண்டன,
பழரசம் அருந்தியவன்,
"பசியின் கொடுமை
தனக்குத் தெரியும்" என்றான்
சுற்றிலும் ஈட்டிக் கண்கள்
கூர்ப்பாய் அவன் மேல் விழித்திருந்தன,
எங்கிருந்தோ வரும் ரோஜாக்களின் வாசனை
அவன் மூக்கைக் கோபம் செய்தது,
மௌனம் சூழ்ந்து
அவனுக்குள் பயம் விதைக்கிறது...
மௌனம் த்யானமல்ல
வேட்டையாடும் கண்கள்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment