Thursday, 23 November 2017

மிஞ்சிய எழுத்துகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.


படிமத்திற்குள் உட்கார்ந்திருந்த
காகமொன்று தலை சாய்த்துப் பார்க்கிறது,
எழுத்துகளை 
கொறித்துக் கொண்டிருந்த குருவிகள்
பறந்து போகின்றன,
சிதறிக்கிடந்த எழுத்துகளைக் கூட்டி
வார்த்தைகளாக்குகிறது காற்று,
ஜென்னும் சூஃபியும் கூட
மௌனமாகக் கடந்து போகிறார்கள்,
காதலனொருவன் காதலிக்காக
சில வார்த்தைகளை 
களவாடிக் கொண்டு செல்கிறான்,
அரசியல்வாதி மிதித்துவிட்டுப் போனதில்
சில எழுத்துகள் அழிந்து போயின,
அவலப் பிழையென ஒரு சில வார்த்தைகளை
புலவர்கள் எரித்துவிடுகிறார்கள்,
சில வார்த்தைகள் மட்டும் சிறைக்குப் பயந்து
பதுங்கிக் கொண்டன,
இப்போது காகமும் நானும் மட்டும்தான் 
தனியாக இருக்கிறோம்
காகத்திடம் சில எழுத்துகளைக் கொடுத்துவிட்டு
எஞ்சிய எழுத்துகளை சேர்த்துப் பார்க்கிறேன்
என் பெயர் மட்டும் மிச்சமாய் இருந்தது. 

- மு.முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts