
ஏற்றிக் கொண்டார் வழியில்
பேறுகாலப் பேச்சாயியை,
வளைகாப்புக்கு விதை நெல்லை
விற்க செல்லும் வீராயி மகனை,
வழியில் ஏற்றிக் கொண்டார்
கைக் காப்புடன்.
தொப்புளான் பேரனை பிடித்த
டாணாக்காரர்களையும்
ஏற்றிக் கொண்டார் வழியில்,
பச்சை ஓலைக்கட்ட
பருத்தி விற்று
பங்காளிகளுக்குப் பாக்கு வெற்றிலை
கொடுக்கச் சொல்லும்
இருளாயி மாமனோடு,
"எய்யா....ஏழு குதிரை அய்யனாரே
எழும்பி நிற்கும் சொடலைமாடா,
சாதி வித்தியாசம் பார்க்காம
மோட்டாரு ஓட்டும் எங்க
மோட்டுத் தெரு கவுண்டரு
ஏழெழு சென்மத்துக்கு நல்லாயிருக்கணும் சாமி..."
என கூவி கொண்டு வழியில் ஏறிய
ஏகாளிப் பேரனையும் ஏற்றிக் கொண்ட
மோட்டுத்தெரு கவுண்டர்தான்
வழியில்,
ஏற்றி கொன்றார்...
ஏழு ஆண்டுகளுக்கு முன்
தன் மகளை இழுத்துக் கொண்டு ஓடிய
சேரியின் செகப்பி மகனை...!!!
கவிஞர் அகன் (தி. அமிர்தகணேசன்)
நூல் : பதிப்பு , பாதிப்பு
No comments:
Post a Comment