
அஃகப் பானையில்தான்
அடங்கியிருந்தது
அம்மம்மாவின் இரகசியங்கள்,
சுருட்டி வைத்ததாய்
சில நூறு நோட்டுகளும்,
சில்லறையாக
சில தங்கக் காசுகளும்,
தாத்தாவின் கடிதமொன்றும்
சூதானமாய்
சுருக்குப் பையில் இருந்தது,
பேரனுக்கான அரைஞாண் கயிறும்
அடக்கமாக அங்குத்தானிருந்தது,
அத்துணையும் எடுத்துவிட்டு
எட்டி துழாவிப் பார்த்தவர்கள்
வேறொன்றும் இல்லையென்றே
அங்கிருந்து நகர்ந்தார்கள்,
அவள் பட்ட அவலத்தின்
வெறுமை இன்னமும்
அஃகப் பானையினடியில்
அப்படியேதான் ஒட்டி இருந்தது.
- மு .முகமது பாட்சா*
No comments:
Post a Comment