
அந்தத் தந்திரக்காரன்
தன் விரல்களை நீவித் திறந்தவுடன்
பூங்கொத்தொன்று கையில் இருந்தது,
தொப்பியைக் கழற்றித் துழாவினான்
புறாவொன்று பறந்தது,
காட்சி மயக்கத்தில்
கண்களைக் கழற்றி வைத்துவிட்டு நகர்கிறேன்,
ரோஜாவின் செடிக் கூட்டொமொன்று
அழகை விரித்து மணம் செய்கிறது,
அதன் வேர்களில்
மண்வாசனை மட்டுமே ஒட்டிக் கொண்டிருந்தது,
அரசனின் அலங்கார மாளிகை முன்பாக
அடிமைகளின் கூட்டம்
ஆடம்பரம் கண்டு வாய்பிளந்து நிற்க...
இறந்துவிட்ட அரசனுக்குத்தான்
இறுதிச் சடங்குகள் நடந்தன....
மண்ணறைக்குள்
இப்போது மக்கிக் கிடக்கிறான் மன்னன்,
சமாதி மட்டும் பளிங்கினால் பவிசு காட்டுகிறது...
அந்தத் தந்திரக்காரன்
தன் விரல்களை நீவித் திறந்தவுடன்
பூங்கொத்தொன்று கையில் இருந்தது,
தொப்பியைக் கழற்றித் துழாவினான்
புறாவொன்று பறந்தது,
காட்சி மயக்கத்தில்
கண்களைக் கழற்றி வைத்துவிட்டு நகர்கிறேன்.
- மு. முகமது பாட்சா*
No comments:
Post a Comment