
கரும்புத் தோட்டத்தில் பிறந்த குழந்தை
கரும்பாக இனிக்கும் என்று
யாருக்குத் தெரியும் !
கியுபாவின் வெளிச்சத்திற்கான
விடிவெள்ளியைப் பெற்றெடுக்கவே
ஸ்பெயினிலிருந்து இடம் பெயர்ந்தாரோ,
தந்தை ஏஞ்சல் ரஸ் !
ஹவானாவில் அரசியல் கற்றவன் தான்
பாடிஸ்டாவின்
பதுங்கு குழிகளையும் தகர்த்தான் !
சேகுவேராவின் செவ்விய நண்பன் !
கேள்விக் குறிகளில் உட்கார்ந்து கொண்டு
ஆச்சரியக் குறிகளை விதைத்தவன் !
ஆதிக்க நாடுகளை அசைத்துப் பார்த்தவன்,
அமெரிக்காவின்
மாய வலைகளில் சிக்காதவன் !
அதிகாரத்தை மக்களிடம் கொடுத்து
அடிமையாக ஆட்சி செய்ய
இவனால் மட்டும்தான் சாத்தியமானது !
மக்களுக்கான தலைவன் மரணித்துவிட்டதாக,
செய்திகள் பொய் வாசிக்கின்றன !
அவன் இறக்கவேயில்லை,
உடலை மட்டுமே இழந்திருக்கிறான் !
இன்னமும், அவன்
எளிய மக்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் !
- மு.முகமது பாட்சா 26/11/2016
No comments:
Post a Comment