
காணாமல் போன தெரு
-----------------------------------------
கரித்துண்டால் பால் கணக்கெழுதிய
ரெங்குத் தாத்தா
கைலாசம் போய்ச் சேர்ந்து விட்டார்.
அச்சு அச்சாக
வரட்டி தட்டச் சொல்லித் தந்த
கோடி வீட்டு அத்தைக்காரி
மணமுடித்துப் பட்டணம் போன பின்
ஊர்ப் பக்கம் திரும்பவில்லை.
கடுங்காப்பியாச்சும் குடுடி தாயே என்று
மருமகளிடம் சதா கெஞ்சிக் கொண்டு கிடந்த
எதிர் வீட்டு ஆவுடையம்மாளின் பேரன்
அவள் மரணித்த செய்தி கிட்டிய கையோடு
அமெரிக்காவிலிருந்து வந்திறங்கி
கிழவியின் பெரிய திண்ணை வீட்டை
வந்த விலைக்கு விற்றுவிட்டுப் போனான்.
வேப்பம்பழங்களுக்கும்
கொடுக்காப்புளிக்கும்
என்னோடு சண்டையிட்ட
மூன்றாவது வீட்டு வேணியக்கா
புருஷனுடன் போட்ட சண்டையில்
அரளிவிதை அரைத்துக் குடித்து மாண்டு போனாள்.
எல்லாருந்தான் போய்ச் சேந்தாச்சுல்ல
இந்த முட்டுச்சந்துல
என்ன வச்சுக் கெடக்குன்னு
இங்க உக்காந்திருக்க...
பம்பாய்க்குப்
பஞ்சம் பிழைக்கப்போன என்
பகட்டுக்காரப் பிள்ளை
இரைந்து கத்துகிறான்.
இந்த முட்டுச்சந்துக்குத் துணையா
நானாச்சும் இருந்துட்டுப் போறேன்...
என்றெனக்குள் முனகிக் கொள்கிறேன்.
*
பிருந்தா இளங்கோவன்
No comments:
Post a Comment