
சொற்களைத் தேடுகிறேன்
எந்த மரங்களின் கிளைகளில் ஒட்டியிருக்கும்?
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகுகளில் கடத்தியிருக்குமோ?
காற்று நகர்த்திச் சென்று
மேகங்களிடம் கொடுத்திருக்கலாம்,
பெய்யும் மழையினில்
அவை இன்னமும் விழவில்லை,
பிணியின் சூட்டில் கரைந்து விட்டதாக
மருத்துவக் குறிப்புச் சொல்கிறது,
இரவையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இரவும் என்னையேத்தான்
பார்த்துக் கொண்டிருக்கிறது
வார்த்தைகளைத் தேட
நட்சத்திரங்களின் உதவியை நாடுகிறேன்
மேகங்கள் தடை போட்டுத் தடுக்கின்றன,
பிணியின் சூடு
போர்வையைப் பற்றியெரிகிறது
குளிகைக்குள் உட்கார்ந்திருக்க வாய்ப்பில்லை,
ஒருவேளை
படுக்கையைச் சுருட்டும் போது
வந்து விழலாம் சில வார்த்தைகள்
மீனவனுக்கு வேறென்ன வேலை.
- மு. முகமது பாட்சா
No comments:
Post a Comment