
நீ நடந்து போக
பாதையில்லையென்று
கவலைப் படாதே
நீ நடந்தால் அதுவே பாதை
அழகான வார்த்தையை
அருமையாகச் சொன்னவன்
ஓர் ஓவியனும் கூட
அவன் விரல்கள் பிடித்த
தூரிகைகள்
கருணையைப் பேசின
மனிதம் வழிந்த ஓவியங்கள்
மனதில் உயர்த்தியது
அவனும்
கவிதைகள் எழுதினான்
அதிகாரம்
அவனிருக்கையில் அமர்ந்தபோது
ஒடிந்து போயின தூரிகைகள்
வண்ணங்கள்
ஒரே நிறத்தை
வாரி பூசிக் கொண்டன
அவன் ஓவியங்கள்
கல்லறைகளுக்குள்
பதுங்கிக் கொண்டது
அவற்றிற்கு மட்டுமே தெரியும்
அவன் வரலாற்றை
இனி யாராலும்
மாற்றியெழுத முடியாதென்று
படைப்புகளும் சில நேரம்
அரிதாரம் பூசிக் கொள்கின்றன
பயனற்ற
அவன் படைப்புகளின் கீழ்
இப்போதும் இருக்கிறது
அவனது அதிகாரத்தின் பெயர்
ஹடால்ப் ஹிட்லர்
- மு. முகமது பாட்சா
ஓவியம் - ஹிட்லர்
No comments:
Post a Comment