Tuesday, 28 November 2017

நான் இரசித்த கவிதைகள் - 97

அனார் க்கான பட முடிவு

பருவகாலங்களை சூடித்திரியும் கடற்கன்னி 


கடற்கன்னி பாடுவதை
யார் கேட்டிருக்கிறீர்கள் 
அபரிமிதமான ஆற்றலோடு தொடங்கும் பாடல்
இருகரைகளில் எதிரொலித்து
துறைமுகங்களைத் தாண்டி விழுவதை
அதிகாலை உறக்கம் கலைந்த படகோட்டி
மதுநெடியுடன் பிதற்றுகிறான்

கடற்கன்னியின் சொற்கள்
குறையாமல் விளைந்த வண்ணமிருக்கின்றன
கரைமணலில் சிறுமிகளின் 
மடிகொள்ளாத வெண்சிப்பிகளாக

நடுக்கடலில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்களில்
மாலுமிகளின் தனியறைகளில் 
கடற்கன்னியின் வாசனை வியாபித்து 
திரைச்சீலைகள் படபடக்கின்றன

அவளின் நீண்டு நெளியும் வால் வசீகரிப்பினை
படர்பாசிகளின் கீழிருந்து வெளிவரும் 
மீன்குஞ்சுப் பட்டாளங்கள் 
பிரயாசையுடன் பின்தொடர்கின்றன

அடர்த்தியான பச்சைநிற பளபளக்கும் செதில்கள்
நீர் அல்லிகளின் வேர்களைப் பின்னி
பௌர்ணமியில் இன்னுமதிகமாய் ஜொலிக்கின்றன

கற்;படுக்கைகளிடையே சுழியோடிகள்
அவளது கண்களின் கவிதைகளைக் கண்டெடுத்து 
ஆராய்ச்சிக் கூடங்களுக்கு 
எடுத்துச் செல்கின்றார்கள்
நள்ளிரவில் கடற்கன்னி
மேகங்களை வேட்டையாடுகிறாள்
அவற்றை வழுக்கும் பவளப் பாறைகளிடையே
பதுக்கி வைத்து
ஜெலி மீன்களை ஏமாற்றுகிறாள்

சீறியெழுந்து நட்சத்திரங்களை ஆய்ந்துகொண்டு
நீருக்குள் நழுவும் அற்புதத்தை
தாம்மாத்திரமே பார்த்தபடியிருக்கின்ற
கருங்கற்பாறைகள்
தம்மை அறியாமலேயே 
உருகிக்கொண்டிருக்கின்றன

உப்பின் காரநெடி காந்தும் அவளது நடனம்
அலைகளின் பயணங்களாய் ஓயாது நிகழ்கின்றது

மின்னல்கள் கூக்குரலிட்டுக் கூவிவெடிப்பதெல்லாம்
கடற்கன்னியின் பெயரைத்தான் என
மலைவாசிகள் நம்புகின்றார்கள்

புராதனகால கடல் அரக்கனின்
தந்திரோபாயங்களை தோற்கடித்தபடியே
பருவகாலங்களை அருளும் கடற்கன்னி
ஒவ்வொரு கடலினிலும் 
நீந்திக் கொண்டே இருக்கிறாள்
பெருகும் தன் ஆற்றலின் பிரவாகத்தைப் பாடிப்பாடி

- அனார் இஸ்ஸத் ரெஹானா

No comments:

Post a Comment

Popular Posts