
புள்ளிகள்
கோடுகளாக மாறியப் பின்பு
கோடாரிகளாகவும்
மாறிவிடுகிறது !
புள்ளிகளுக்குள் இருக்கும்
புள்ளிகளை
அழிப்பான்கள் கூட
அழிப்பதில்லை !
புள்ளிகளே
கோள்களாகவும்
மாறிவிடும் அபாயம் உண்டு !
ஒற்றைப் புள்ளியிலிருந்துதான்
விரிகிறது இந்த உலகம்,
கூடவே, பிரச்சனைகளும் !
புள்ளிகள்தானே என்று
புறம் தள்ளிவிடாதீர்கள்...
காற்புள்ளிகளாய் மாறி,
கேள்விக்குறிகளாகவும்
கேள்வி கேட்கத் தொடங்கிவிடும் !
ஆச்சரியக் குறிகள்
அப்போது
ஆயுதம் எடுக்கத் தொடங்கி விடலாம் !
புள்ளிகளே, இல்லாத கோலங்கள்
எப்போதுமே,
அழகாக இருப்பதில்லை !
முக்கியப் புள்ளிகளென்று
சுற்றித் திரிபவர்களில்,
முக்கால்வாசிப் பேர்
முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள் !
இவர்களின் பின்னால்
சுற்றித் திரியும் செய்வினைகள்
இல்லையென்றால்
இவர்களெல்லாம்
வெறும் எச்சங்களாகி
மிச்சங்களாகிக் கிடப்பார்கள் !
புள்ளிகள்தானே,
என்று ,புறம் தள்ளி விடாதீர்கள்,
புள்ளிகள்தான்,
பரிமாணங்களின் ஆரம்பமும் கூட !
- மு.முகமது பாட்சா
27/11/2016
ஓவியம் : முகமது பாட்சா
No comments:
Post a Comment