
மழையிலொழுகும் இராகங்களை
பாத்திரங்களில் சேகரிக்கிறேன்,
புனலொழுகி வழியும் இராகங்கள்
ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன,
பறவைகள் சில இராகங்களை
அடைகாக்கிறது,
எரியாத அடுப்பிலுறங்கும் பூனை
வயிற்றுக்கான இசையைத் தேடுகிறது,
விழிகள் மீட்டும் இராகம்
உணவுப் பொட்டலங்களுக்காகக் காத்திருக்க
நோய்மை மீட்டும் இராகங்கள்
முனங்கலிசையை இசைக்கின்றன,
துள்ளாத இராகங்கள் காகிதத்தில்
கப்பல் செய்து விடுகின்றன,
முறிந்து வீழ்ந்த மரங்களின் இராகம்
போதாமையின் வெளிப்பாடு,
பொய்மையின் இராகங்கள்
'சுபமஸ்து' என்றே பல்லவி பாடுகின்றன,
மழையின் இராகங்களை
இப்படித்தான் அனுபவிக்கிறோம்.
அமைச்சுகளின் கோமாளி இராகம் கேட்டு
காதுகளில் சீழ்தான் வடிகிறது
- மு. முகமது பாட்சா
No comments:
Post a Comment