
கனவு நிழலை நெசவு செய்கிறது
அதன் நிலம் எத்துணை அழகானது
மழையினைக் கையேந்திய நதியொன்று
கரை புரண்டோடுகிறது
இரவின் மடியில்
நட்சத்திரங்கள் விளையாடுகின்றன
பஞ்சையே ஆடையாக உடுத்திய
மதிவதனி மறைந்து நின்று பார்க்கிறாள்
மயங்கிசையொன்று
எங்கிருந்தோ காற்றாய்க் கலக்கிறது
கவிதையொன்றைக் கம்பளமாய் விரித்து
அமர்ந்து கொள்கிறேன்
கற்பனையில் பறப்பதும் ஒரு சுகம்தான்
விடிந்ததும்
உதிர்ந்து கிடக்கும் என் மிச்சங்களை
யாராவது கூட்டித் தள்ளி விடுவார்கள்
வேகவேகமாக
என்னையே நான் பொறுக்கிக் கொண்டு
ஓடவேண்டும்
தேடல்களைத் தேடும் நிழல்களுக்கு
இங்கு வேறு வேலையென்ன இருக்கப் போகிறது.
- மு. முகமதுபாட்சா*
No comments:
Post a Comment