
மிகவும் நீண்டு கொண்டே செல்கிறது
அந்தக் கவிதையின் வரிகள்
கயிறென்று நினைத்த சிலர்
அதனை வடமாக்கியிழுக்கிறார்கள்
மாயத் தேரொன்று
அசைந்தசைந்து நகர்கிறது
சிதைந்து வீழ்ந்த வரிகள் மிதிப் படுகின்றன
சில வரிகளை
சிலர் கடவுளாக்கி வழி படுகிறார்கள்
கவிதையின் தாள்
இப்போது வெள்ளை மௌனம் பூக்கிறது
விதவையென்று
ஒருவன் சொல்லிவிட்டுப் போகிறான்
மல்லிகையென்றவன் மனைவிக்குச் சூடுகிறான்
புத்தனின் ஆடையென்று
பிட்சுகள் எடுத்துச் செல்கிறார்கள்
அரசியல்வாதியொருவன்
அங்கவஸ்திரமாக்கிக் கொள்கிறான்
பார்வையிழந்தவனை மட்டும்
அது பார்க்காமலேயே கிடக்கிறது
இரைந்து கிடந்த பார்வைகளெல்லாம்
சிறகுகளை வரைந்து பறக்க விடுகின்றன
ஆரிகாமியாய் பறக்கும் அந்தப் பறவை
உங்களின் பார்வைகளில் தென்பட்டால்
அதனை வாசித்துப் பாருங்கள்
அது சொல்ல வந்த சேதி
இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.
- மு. முகமது பாட்சா
No comments:
Post a Comment