
வார்த்தைகளை
தேடிக் கொண்டிருந்த கவிதையிடம்
நான்தான்
முதலில் பேச்சுக் கொடுத்தேன்,
காற்று சில எழுத்துகளை
களவாடிச் சென்றுவிட்டதாக
குற்றம் சாட்டியது,
உஷ்ணத்தில்
கருகிக்கிடந்த எழுத்துகளை
ஒன்றுமே செய்ய முடியாது,
மரங்களைப் பற்றி
கவிதையெழுதச் சொன்னேன்,
காற்று மெல்லன
வார்த்தைகளை உதிர்த்தன...
மலர்களைப் பற்றி
எழுதச் சொன்னேன்
வாசம் வந்து ஒட்டிக் கொண்டது,
காதலைப் பற்றி எழுதிய பின்புதான்
பட்டாம் பூச்சிகளே பறந்து வந்தன,
பறவைகளை
வரைந்த எழுத்துகளால்
கானகம் உருவாக்கி
வார்த்தைகளைச் சுமந்தன கவிதைகள்,
கவிதைகளைச் சுமந்த
நெஞ்சோடுதான் உட்கார்ந்திருக்கிறேன்
என் காதலியின் வருகைக்காக !
- மு.முகமது பாட்சா*
05/04/2017
No comments:
Post a Comment