
சன்னலின் கம்பிகளில்
எதிர்பார்ப்பை எழுதி வைக்கிறேன்...
அதைப் பற்றிப் படர்ந்த கொடி
நிலவை இழுத்து வருகிறது....
அசையும் காற்றில்
மெல்ல ஆடை படரும் குளம்பி...
எழுதாத வெள்ளைத்தாள்
இடம் பெயர்ந்து சடசடக்கிறது...
எலியின் ஆயுத உருட்டலில்
பூனையின் கண்கள் சுதாரிக்கின்றன...
திகில் நாவலின் கதாப்பாத்திரங்கள்
சன்னலருகே நடந்து போகிறார்கள்....
நாயொன்று
ஓநாயின் குரலை இரவல் வாங்கி
ஊளையிடுகிறது...
பாடலொன்றைக் குரலால் படர்த்துகிறேன்
வலி இன்னமும் நகராமல்
அங்கேயேதான் உட்கார்ந்திருக்கிறது....
நாளைக்குத்தான் தெரியும்
இருக்கிறேனா? இறந்துவிட்டேனா என்று
ஒரு கனவு
வெள்ளித்திரையில் வெளிச்சமாகிறது.
- மு.முகமது பாட்சா*
02 /04 /2018
No comments:
Post a Comment