
சைக்காவின் கோப்பையில்தான்
அக்கியோ தேநீர் அருந்துகிறான்
அவளின் விழிகள்
அவனை அருந்திக் கொண்டிருந்தன
போன்சாய் மரங்களை
பிடிக்காதென்று சொன்னவனும் அவன்தான்
உடைந்துபோன புத்தருக்காக
அமைதியிழந்தவளை அணைத்து
புத்தரை அவமதிக்கிறாய் என்றவன்...
அனுமதி பெற்று ஒருதடவை
அவள் கண்களில் முத்தமிட்டிருக்கிறான்...
அவனெழுதிய ஹைக்கூ
வார்ப்பட்டையாய் அவள் கைகளில் மின்னுகிறது
உன் நினைவுகளை
இன்னமும் கொடேன் அக்கியோ
அவள் மனம் மீண்டும் மீண்டும் புலம்புகிறது
ஜப்பானின் அழகே புன்னகைதான்
அவன் சொன்னது நினைவில் நிற்க...
அவள் புன்னகைக்கிறாள்
இப்போதுதான்
தேநீர் சுவைக்கிறது என்றான் அக்கியோ...
இறுதி சொட்டை சுவைத்தவன்
இதுதான் தேநீரின் தேன்சுவை என்றான்...
காலியான கோப்பை மட்டுமே
சைக்காவிடம் அக்கியோவின் நினைவை
விட்டு வைத்திருந்தது.....
மரங்களின் பூச்சொரிவில்
அக்கியோ சிரித்து கொண்டேயிருக்கிறான்.
அவன் கல்லறையில் எழுதி வைத்த வார்த்தையை
மீண்டும் படிக்கிறாள் சைக்கா
இங்கு உறங்குவது அக்கியோவின் சைக்கா.
- மு.முகமது பாட்சா*
04/04/2018
No comments:
Post a Comment