
அது உண்மைதான்
என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள் ,
அப்படி இருக்க முடியாது என்று சொன்னவர்கள்
அங்கேயே நின்று கொண்டிருக்க
அப்படிதானாம் என்று ஒருவன்
வேகமாகச் சொல்லிவிட்டு ஓடுகிறான்.
இப்படியும் நடக்குமா ! என்று பதைத்தவர்கள்
அப்படி இருக்கக் கூடாது
என்று வேண்டிக் கொண்டார்கள்.
அப்படி என்னதான் நடந்துவிட்டதென்று
ஒருவன் சாவகாசமாக கேள்வி கேட்கிறான்.
எல்லோரும் அவனையே திரும்பிப் பார்க்க
இவனெல்லாம் இப்படியிருக்கவேதான்
அப்படியெல்லாம் நடக்கிறது என்று
ஒரு கிழவன் சலித்துக் கொள்கிறான்...
இது எனக்கு அப்போதே தெரியும் என்றவள்
முருங்கைக்காயை நறுக்கிக் கொண்டிருக்க...
நிகழ்ச்சியை மாற்றிக் கொண்டது தொலைக்காட்சி,
செய்தித் தாளை
ஒருவன் சாவகாசமாக மடித்துக் கொண்டிருந்தான்,
ஒரு சிலர் சாமியை கும்பிட்டுக் கொண்டிருக்க
ஒருவன் செருப்பை திருடிக் கொண்டிருந்தான்
கிழவர் இன்னமும்
அந்தப் பழைய நவீனத்தின் புதிய பக்கங்களை
சுவாரசியமாக படித்துக் கொண்டிருந்தார்.
- மு.முகமது பாட்சா*
27 /04 /2018
No comments:
Post a Comment