
என் சிறகுகளைப் பிடுங்கி கொளுத்திவிட்டு
பட்டாடைகளை
அணிந்து கொள்ள சொல்கிறாய்,
என் தேகம்
வர்ணனைகளால் பூசப்பட்டிருக்கிறது,
நான் நிற்குமிடத்தில்
நிழல்கள் என்னையே நோட்டமிடுகின்றன,
நானென்பது நீயாகிப் போனதால்
நான் நானாகவேயில்லாமல் நிற்கிறேன்,
வார்த்தைகளின் மழையால்
அவ்வப்போது பன்னீர் தூவுகிறாய்...
வசந்தம் என்பது
என் கனவுகளின் முடக்கம்,
உன் ஆற்றாமையின் அந்தரங்க பசி
அடிக்கடி என் மீதே படர்கிறது
வீணை என்கிறாய் பனுவல் என்கிறாய்
வாசித்து முடித்ததும்
மூலையில்தான் எறிகிறாய்...
என் உறங்காத இரவுகளின்
ஒரு மூலையையாவது கொளுத்திப் பார்....
என்னோடு சேர்ந்து நீயும் எரிந்து கொண்டிருப்பாய்.
- மு.முகமது பாட்சா*
24 /04 /2018
No comments:
Post a Comment