
அந்த ஓரெழுத்து
இன்னமும் எனக்குள்
அசைந்து கொண்டேயிருக்கிறது
அந்த எழுத்து
எந்த வார்த்தையின் மீதும்
உட்காரத் தயங்குகிறது
தூக்கத்தைக் கலைத்துவிட்டு
துன்பவியல் பேசுகிறது
தூக்கியெறிகிறேன்
நிழலுக்குள் பதுங்கிக்கொண்டு
நீ யாரென்று கேட்கிறது
பிழையெழுத்தாக இருக்கக் கூடுமென
எரித்துப் பார்க்கிறேன்
சிறகுகளோடு பறந்து வந்து
சிந்தைக்குள் நுழைந்து கொள்கிறது
அர்த்தமில்லாத அந்த எழுத்திற்கு
புத்தனென்று பெயரிடுகிறேன்
நீயென்ன போதி மரமா?
என்று கேட்டு நகைக்கிறது
அதன் கைத்திருப்புச் சீட்டில்
நான் கடன்காரனாக நிற்கின்றேன்
யாருமதை வாங்கிவிடாதீர்கள்
அந்த எழுத்து மிகவும் ஆபத்தானது...
'ம்'
- மு.முகமது பாட்சா*
11/04/2018
No comments:
Post a Comment