
அந்தக் கதையின் முடிவு
ஒரு பாதகக் கொலையில் முடிந்திருந்தது,
கதையின் ஆரம்பம்
காதலாகத்தான் தொடங்கியது,
எழுதியவன் பேனா
அவளின் தேகத்தை எள்ளவும் விடவில்லை,
இரசனையென்பது
வாசிப்பவனையும் தொற்றிக் கொள்கிறது,
இடையில் வந்தவன் நண்பனாகிறான்,
அவனிடம் ஒட்டிக் கொண்ட பிரச்சனை
பக்கங்களை
எச்சில் தொட்டு நகர்த்துகிறது...
விழுந்து கிடந்த ஆயுதத்தின் இரேகைகளை
இடம் மாற்றிக் கொண்டிருந்தவர்கள்
பிணத்தை கூறுக்கு அனுப்பி வைத்தார்கள்,
புத்தகத்தை மூடிவிட்டு
கைகளை கழுவிக் கொள்கிறேன்
இரத்த பிசுபிசுப்பு அறுவெறுப்பாக இருக்கிறது.
கதவைத் தட்டிவிட்டு
உள்ளே வரலாமா என்று நுழைந்த காவலதிகாரி
கண்களில் எழுதப்படாத அடுத்தகதையை
துழாவி தேடிக் கொண்டிருந்தார்.
- மு.முகமது பாட்சா*
21/04/2018
No comments:
Post a Comment