
காலைக் கடற்கரை கண்விழிக்கும் போது
சுக்கு காபியின் மணம் சூடேற்றுகிறது
வயதைத் தொலைத்தவர்கள்
வாழ்க்கையைத் தேடி நடந்து கொண்டிருக்க
இளமைகள் ஆங்காங்கே
எகிறி குதித்துக் கொண்டிருக்கின்றன
சூடான இடியாப்பம் தேங்காய்ப் பால்
பேச்சிலர்களின் காலைக்காகக் காத்திருக்க
மூன்று சமாதிகள்
கிராமத்தின் வேடிக்கையாகிப் போகிறது
கடற்கரை காகங்கள்
காற்றின் வேகத்திலும் இரையெடுக்கின்றன
கூட்டம் கூடி சிரிப்பவர்கள்
அருகம் சாற்றுக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள்
செருப்பணியாதா கால்தடங்களையே
கடல் அலைகள் அடிக்கடி முத்தமிடுகின்றன
உறவுகளை தேடிக் கொண்டிருக்கும் ஒருவனை
கடந்து போகிறாள் காதலனைத் தேடுபவள்
காலை வெய்யில் மெல்லன விரியும் போது
மணற் பரப்பும் பொன்னிறம் பூசிக் கொள்கிறது
போராளிகளின் தலைகள்
மெல்ல மெல்ல பூக்கத் தொடங்குகின்றன...
ஒன்றிரண்டு காக்கிச் சட்டைகள்
ஓராயிரமாகக் குவிந்து கைத்தடிகள்
எல்லோரையும் கலைந்து போகச் சொல்லுகிறது
கடற்காற்றும் உஷ்ணமேந்தி பதற்றமடைகிறது
அலைகளின் வேகம் இரு மடங்காகி வீச
காற்றின் வேகத்திலும் இரையெடுக்கின்றன
இப்போதும் கடற்கரைக் காகங்கள் !
- மு.முகமது பாட்சா*
29 /04 /2018
No comments:
Post a Comment