
வீணை தன்
நரம்புகளை இறுகக் கட்டிக் கொள்கிறது
நாதசுவரத்தின் துளைகளில்
குளவிகள் கூடு கட்டியிருக்கின்றன
தவிலின் தோல் வார்கள் அறுந்து தொங்க
தபேலாவின் பானை உடைந்து கிடக்கிறது
சலங்கைகள் கால்களை விட்டு நழுவி
காட்சியாய் உறங்க...
புல்லாங்குழலெடுத்து வாசிக்கும் இசையை
இராக்குருவியொன்று களவாடிச் செல்கிறது....
உறக்கம் வராத இரவின் சன்னல்கள்
எப்போதும் திறந்தேதான் கிடக்கின்றன
வெளிச்சம் மனதிற்குள் வரும்போது மட்டும்
பார்வைகள் துல்லியம் பெறுவதாய்
பிரமையின் காகங்கள் வானத்தில் பறக்க
வெண்மேகங்கள்
கார் வண்ணம் பூசிக் கொள்கின்றன
நாடோடியின் பாடலில் மழையாக வருகின்றாய்
வாசலில் வந்து
இசை இப்போது தவம் கிடக்கிறது...
பூச்செண்டில் உட்கார்ந்திருக்கும் வார்த்தைகள்
மொழி பெயர்க்க முடியாத
என் கவிதையின் அங்கங்கள்தான்
சற்றே வாசிக்கிறேன்
புன்னகையை கொடுத்து வாங்கிச்செல்.
- மு.முகமது பாட்சா*
07 /04 /2018
No comments:
Post a Comment