
இரவின் நிலம்
காலின் கீழ் நழுவி வீழ்வதாக உணர்கிறேன்
நிறப்பிரிகையாய் ஊடுருவும் ஏழு வண்ணங்கள்
இறக்கைகளை அணிந்து கொள்கின்றன
இதயத்துள் நுழையும் அந்த நதி
நீண்ட கோடுகளாய் வளைந்து செல்கிறது...
கந்தக நெடி மூச்சுக் காற்றில் நிறைந்து நிற்க
கடலைப் பிடித்து குடுவையில் தருகிறேன்
மீனாக அதிலவள் நீந்துகிறாள்....
பூனையின் கண்களோடு
அலைமோதும் பாம்பாகத் தவிக்கிறேன்...
வாசனைகளைத் தூவி
வசந்த மண்டபம் நிறுவுகிறது மாயா பிம்பங்கள்...
பறவைகளின் மொழியில் பேசிக் கொள்கிறோம்...
மழைத் தூறலின்
மகரந்த வாசம் பட்டாம்பூச்சிகளை கிளர்த்துகிறது
விரல்களைக் கொண்டு
விரல்கள் மொழி சமைக்கின்றன
வேர்கள் பின்னினால் இலைகள் சிலிர்க்கத்தான் செய்யும்
கருப்பு வெள்ளைக் கனவில்
இளஞ்சிவப்பு பூசிச் செல்கிறது மூங்கிலின் பாட்டு...
வனம் தொலைந்து மிருகம் அலைகிறது
நிறப்பிரிகையில் மிருகம் தொலைந்து எழும்போது
வானம் துளிர்த்து பகல் விடிகிறது...
- மு.முகமது பாட்சா*
21/03/2018
No comments:
Post a Comment